எடப்பாடி: எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் அமைந்துள்ள, பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று (ஜூன் 8) வியாழன் கிழமை காலை விமர்சையாக நடைபெற்றது.
எடப்பாடி நகராட்சி எல்லைக்குட்பட்ட ஆலச்சம்பாளையம் காட்டூர், பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சுற்றுப்புற பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இத்திருக்கோயிலின் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
முன்னதாக கல்வடங்கம் காவிரி நதிக்கரையில்லிருந்து, புனித நீர் எடுத்து வந்த பக்தர்கள், தீர்த்த குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சன்னதியில் சமர்ப்பித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹதி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக வேள்விகளைத் தொடர்ந்து, வேத மந்திரம் முழங்கு இன்று காலை திருக்கோயில் கோபுர கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா" கோஷம் முழங்க முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாக குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.