பொள்ளாச்சி: ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தென்னை மர டானிக் வினியோகம் செய்யப்படுகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாக்களில் தென்னை விவசாயம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பாக ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தென்னை மரங்களில் ஏற்படும் நோய் தாக்குதல்கள், தென்னை மரத்திற்கு உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் பல்வேறு ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர சிறந்த ரக தென்னங்கன்றுகள் தென்னை ஆராய்ச்சி நிலையம் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் தென்னை டானிக் விற்பனை செய்து வருகிறது. இதை பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதி விவசாயிகள் சென்று வாங்குவதற்கு கோவை செல்ல வேண்டி உள்ளது. ஆகவே, விவசாயிகளின் பயண நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் சிரமத்தை போக்கவும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்திலேயே தென்னை டானிக் தற்போது வினி்யோகம் செய்யப்படுகிறது. இந்த தென்னை டானிக் மூலம், தென்னை மரத்திற்கு நுண்ணூட்ட சத்துக்கள் கிடைக்கிறது. மேலும் குறும்பை உதிர்வும் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ஆகவே, விவசாயிகள் தென்னை டானிக் தேவைப்பட்டால் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தை நேரடியாக அணுகலாம் அல்லது 04253 288722 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளும் பார்சல் சர்வீஸ் மூலம் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.