தமிழ்நாடு

அதிமுக, பாஜக, தமாகா உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறும்: ஜி.கே.வாசன்

DIN


கோவை: தமிழ் மாநில காங்கிரசை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதையும், பணிகளையும் தொடங்கிவிட்டதாகவும், வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, தாமக உட்பட ஒத்த கருத்துடைய கட்சிகள் கொண்ட கூட்டணி வெற்றி அடையும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, கர்நாடக அரசு மேகதாதவில் புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும். இந்த பிரச்னையில் திமுக கூட்டணி கட்சிகள் மௌனம் சாதிக்க கூடாது. அணை கட்டினால் காவிரி டெல்டா பாலைவனமாகிவிடும், இது பயிர் பிரச்னை அல்ல, உயிர் பிரச்னை என தெரிவித்தார்.

மேலும், திமுக அரசு மக்கள் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறது. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல் மின் கட்டண உயர்வு ஏற்புடையது அல்ல எனவும் உடனடியாக தடுத்து நிறுத்தி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் தெரவித்தார். 

கொங்கு மண்டல கனவு திட்டமான அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பெரும்பாலான பணிகள் முடித்தும் இரண்டு ஆண்டுகளாக சரிவர பணியை செய்யாமல் உள்ளது. அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என செய்திகள் வருகின்றன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு திணறி வருகிறது என்பது தான் உண்மை நிலை. அரசு மக்களின் பணத்தை வீணடித்து வருகிறது, இந்த அரசு மக்கள் வாழ்க்கையை சீரழித்து வருகிறது எனவும் குற்றம்சாட்டினார். 

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட ஜி.கே.வாசன், பொதுமக்கள் நடமாட்டம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.  சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு காரணமே டாஸ்மாக்கும் போதைப்பொருட்களும் தான். அதனை தடுக்க வேண்டும்.  

பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் கல்வியின் தரம் குறையும் தருவாயில் உள்ளதை சுட்டிக்காட்டிய வாசன், தேவைக்கு தகுந்தாற்போல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்து அதனை உறுதி செய்ய வேண்டும். பல அரசு பள்ளி, கல்லூரி கட்டடங்கள் பழுதடைந்துள்ளது. இதை ஒரு காலக்கெடுவுக்குள் சரி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கோண்டார். 

தொடர்ந்து பேசிய ஜி.கே.வாசன், கோவை, திருப்பூர் உள்பட பல பகுதிகளில் காற்று மழையால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது. வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். தென்னை விவசாயிகள் வேதனையில் வாடி வருவதாகவும், கொப்பறை தேங்காய் விலை வீழ்ச்சியை போக்க குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து கூட்டுறவு மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். நியாயவிலை கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.

கோவை மாவட்டம் முழுவதும் சூயஸ் நிறுவனத்தால் மண் தோண்டப்பட்டு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் மழைக்காலம் தொடங்கும் முன்பு சாலைகளை சீரமைக்க வேண்டும். பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டி பொள்ளாச்சியை தென்னை மாவட்டமாக  அறிவித்தால் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் எனவும் கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மெத்தனமாக நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

ஆவின் பணிகளுக்கு முறையான கண்காணிப்பு தேவை, அதிகாரிகள் சரியாக மக்களுக்கு சரியான முறையில் பால் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய ஜி.கே.வாசன், குழந்தை தொழிலாளர்களை வைத்து எந்த துறையாக இருந்தாலும் அதனை அவர்கள் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். 

பிளக்ஸ் பேனர் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக, திமுக இவற்றை தாண்டி அனைத்து கட்சிகளும் ஃபிளக்ஸ் போர்டுகளை பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் வைக்க வேண்டாம் எனவே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து எந்த கட்சியினராலும் ஏற்படக் கூடாது என வேண்டுகோள் விடுத்தார். 

பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்பற்ற முறையில் பேச கூடாது. குறிப்பாக அமைச்சர்கள் அப்படி பேச கூடாது. கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் எனவும் தவறான எடுத்துக்காட்டாக இருக்கக் கூடாது என தெரிவித்தவர். மாணவர்கள் ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும் என காமராஜர் கூறி மாற்றியது போல தற்போதுள்ள மாணவர்களையும் மாற்ற வேண்டும் என தெரிவித்தார். 

வெளிநாட்டு பயணம் விளம்பரத்திற்காக இருக்கக் கூடாது, பயன்தரக்கூடிய பயணமாக இருக்க வேண்டும் எனவும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது என்பது வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்த ஜி.கே.வாசன்,  இந்த அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றால் 24 மணி நேரமும் நடத்த வேண்டும் என சாடினார்.

இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் செயல்பட்டு வருகிறது எனக் கூறியவர், தொடர்ந்து பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, தொழிலாளர் விரோத போக்கு இதை எல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் வாக்களிப்பார்கள் எனவும் யார் தவறு செய்திருந்தாலும் அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

மேம், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டதாக என்பது தொடர்பான கேள்விக்கு ஜூலை 15 முதல் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை பட்டியிலிட்டதோடு, தமாகா பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதையும் பணிகளையும் தொடங்கி விட்டோம் எனவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக தமாகா உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகள் கொண்ட கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT