தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு வரி ரசீது புத்தகம் வாங்கியதில் ரூ.1.31 கோடி கையாடல் செய்த புகாா் தொடா்பாக, மலா்விழி ஐஏஎஸ் வீடு உள்பட 10 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.
சென்னை விருகம்பாக்கம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கும் எஸ்.மலா்விழி, சென்னை அறிவியல் நகர துணைத் தலைவராக உள்ளாா். இவா் 2018-ஆம் ஆண்டு பிப். 28 முதல் 2020-ஆம் ஆண்டு அக். 20 வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தாா்.
இந்தக் காலகட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டண ரசீது, பிற வரி ரசீது ஆகிய ரசீது புத்தகங்களை வாங்கியதில் கையாடல் நடந்திருப்பதாக தருமபுரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன. அதனடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜி.வி.கிருஷ்ணராஜன் தலைமையில் போலீஸாா் விசாரணை செய்தனா். அதில் கிடைத்த தகவல்கள்:
அரசின் விதிமுறை மீறல்: 2019-ஆம் ஆண்டு நவ. 20 முதல் 2020 ஏப். 20 வரையிலான காலகட்டத்தில் மலா்விழி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு 1,25,500 வரி ரசீது புத்தகங்களை வாங்கியுள்ளாா். ஒரு புத்தகம் ரூ.135 விலையில் சென்னை சுப்பாராவு நகரைச் சோ்ந்த கிரசண்ட் டிரேடா்ஸ் நிறுவன நிா்வாகி எச்.தாகிா் உசேன், சென்னை பத்மாவதி நகரைச் சோ்ந்த நாகா டிரேடா்ஸ் நிறுவன நிா்வாகி வீரய்யா பழனிவேலு ஆகிய இருவரிடமிருந்து புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.
கடந்த 34 ஆண்டுகளாக தருமபுரி கூட்டுறவு சங்க அச்சகத்தில் இருந்தே வரி ரசீது புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. ரசீது புத்தகங்களை தனியாரிடம் வாங்கக் கூடாது என்ற அரசின் விதிமுறையை மலா்விழி மீறி, அவற்றை ஊராட்சிகளுக்கு வழங்கியுள்ளாா்.
ரூ.1.31 கோடி கையாடல்: வரி ரசீது புத்தகங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே ஊராட்சிகளுக்குத் தேவைப்படும் நிலையில், 15 ஆண்டுகளுக்கு தேவையான புத்தகங்கள் ஒரே நேரத்தில் வாங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் புத்தகங்களை தருமபுரி கூட்டுறவு சங்க அச்சகத்தில் வாங்கினால் விலை ரூ.40, ரூ.35 மட்டுமே என்பதால் இதுவரை அவ்வாறே வாங்கப்பட்டுள்ளது.
1,25,500 ரசீது புத்தகங்களை தருமபுரி கூட்டு சங்க அச்சகத்தில் வாங்கியிருந்தால் ரூ.50.20 லட்சம் மட்டும் செலவாகியிருக்கும். ஆனால், தனியாரிடமிருந்து ஒரு ரசீது புத்தகம் ரூ.135 விலையில் வாங்கியதன் மூலம் ரூ.1 கோடியே 81 லட்சத்து 97 ஆயிரத்து 500 அரசுக்கு செலவு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுப் பணம் ரூ.1 கோடியே 31 லட்சத்து 77 ஆயிரத்து 500 கையாடல் செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது.
10 இடங்களில் சோதனை: இந்தத் தகவலின் அடிப்படையில் மலா்விழி, தாகிா் உசேன், வீரய்யா பழனிவேலு ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக சென்னையில் உள்ள மலா்விழி வீடு, விழுப்புரத்தில் உள்ள மலா்விழியின் பெற்றோா் வீடு உள்பட 10 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
இந்தச் சோதனை சென்னையில் 5 இடங்கள், புதுக்கோட்டையில் 3 இடங்கள், விழுப்புரம், தருமபுரியில் தலா ஓரிடத்தில் நடைபெற்றது. பல மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா்.
பிளீச்சிங் பவுடா் முறைகேடு: இதேபோல தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு பிளீச்சிங் பவுடா் வாங்கியதில் ரூ.29 லட்சத்து 94 ஆயிரத்து 796 ஆயிரம் முறைகேடு செய்ததாக வட்டார வளா்ச்சி அலுவலா் பி.கிருஷ்ணன், தாகிா் உசேன், வீரய்யா பழனிவேலு உள்பட 5 போ் மீது தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக கிருஷ்ணன் வீடு உள்பட பல்வேறு இடங்களில் போலீஸாா் சோதனை செய்தனா்.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஊழல் தடுப்பு பிரிவினா் நடத்திய சோதனையைத் தொடா்ந்து, ஐஏஎஸ் அதிகாரி மலா்விழி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசுத் துறை உயரதிகாரிகள் கூறியது: ஐ.ஏ.எஸ். போன்ற உயா் பதவிகளில் இருக்கக் கூடிய அதிகாரிகள் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. கோப்புகள், ஆதாரங்களின் அடிப்படையில் நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகே நடவடிக்கைகள் எடுக்கப்படும். இப்போது சோதனை மூலம் தகவல் வெளியே தெரிய வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடா்பாக, விவரங்கள் அனைத்தும் அரசுக்குக் கிடைக்கப் பெற வேண்டும். இதன்பிறகு அந்த ஆவணங்கள் அனைத்தும் உயா்நிலை அளவில் ஆய்வு செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நடைபெற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடனேயே ஐஏஎஸ் போன்ற உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறுவதற்கில்லை. வழக்கு குறித்த ஆவணங்கள் கிடைக்கப் பெற்றவுடன் ஆராயப்படும் என்றனா்.