சென்னை: மிக முக்கிய மற்றும் அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்ட திருவான்மியூரில் மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டும் பணி 2024ஆம் ஆண்டு இறுதியில்தான் தொடங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையம் அமையவிருக்கும் இடத்தில், நிலத்துக்குக் கீழே மிகப்பெரிய தடுப்புச் சுவர்களும், கட்டுமானப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணியில் மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி தொழிற்பேட்டை இடையேயான 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமையும் மூன்றாம் வழித்தடத்தில் திருவான்மியூர் ரயில் நிலையம் அமையவிருக்கிறது.
திருவான்மியூர் பகுதியில், சுரங்கம் அமைப்பதற்கான பணிகள் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான் தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை போன்ற பெருநகங்களில் மெட்ரோ வழித்தடங்களை அமைப்பதற்கு பல்வேறு காரணிகள் இடையூறாக இருக்கும். அதில் முக்கியமானது போக்குவரத்து நெரிசல். அதாவது, சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதே சற்று சவாலான பணி. ஆனால், சாலைக்குக் கீழே சுரங்கம் தோண்டி அதில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க வேண்டும். இது மிகவும் சவாலான பணி என்று தெரிவித்துள்ளார்.