தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி தொடர்பாக மேலாண்மை குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம், அபாயகரமான கழிவுகள் ஆகியவற்றை அகற்றுவது, ஆலையில் உள்ள பசுமை வளையம் பராமரிப்பு உள்ளிட்ட 4 விதமான பணிகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற ஆணைப்படி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆலை பராமரிப்பு பணிகள் தொடர்பாக துணை ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை பொறியாளர் ஹேமந்த், தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி சுரேஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் ரங்கநாதன், தொழிற்சாலைகளின் இணை இயக்குநர் சரவணன், தீயணைப்பு துறை மாவட்ட துணை அலுவலர் ராஜு, ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட மேலாண்மை குழு உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த குழுவினர் ஆலைக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இதையொட்டி ஸ்டெர்லைட் ஆலை முன்பு சிப்காட் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது