சேலம்: காவிரியில் மூழ்கி திமுக கவுன்சிலரின் மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் குள்ளவீரன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ. மேட்டூர் நகராட்சியில் இரண்டாவது வார்டு திமுக உறுப்பினராக உள்ளார்.
இவரது மகன் சதீஷ்குமார் (21) பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர். நாளை தனியார் தொழிற்சாலையில் பணிக்கான நேர்முகத் தேர்விற்கு செல்லவிருந்தார்.
இன்று அவரது நண்பர் கொளத்தூர் அய்யம்புதூரை சேர்ந்த குப்புசாமி மகன் செல்வகுமார் (19) (பி.காம் படித்து வருகிறார்) என்பவருடன் மேட்டூர் அணை பூங்காவை சுற்றி பார்த்து பின்னர் காவிரியில் நீராட விராலிகாடு பகுதிக்குச் சென்றனர்.
மேட்டூர் நீர்த்தேக்கத்தில் நீண்ட நேரம் நீராடியவர்கள் சற்று தொலைவிற்கு சென்றபோது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்கள் சிலர் ஓடி தங்களது சேலைகளை கட்டி தூக்கி வீசினார்கள்.
இதில் செல்வகுமார் மீட்கப்பட்டார். ஆனால் சதீஷ்குமார் நீரில் மூழ்கினார்.
தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைத் தேடினார்கள். மீனவர்களின் உதவியோடு சதீஷ்குமாரின் சடலம் மீட்கப்பட்டது.
சதீஷ்குமாரின் சடலத்தைக் கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.