அம்பாசமுத்திரம்: வனப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமானதையடுத்து கோயில் முகப்பு நிழலில் இளைப்பாறிய குட்டி சிறுத்தையின் படம் சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
தமிழகத்தில் கோடை அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நாளை கல்வித் துறை இரண்டு முறை தள்ளிவைத்து உத்திரவிட்டுள்ளது.
இந்நிலையில், வனப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதால் அதிலிருந்து தப்பிக்க வனவிலங்குகள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றன.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப் பன்றி, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குள் உள்ளன. மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்பகுதியில் உள்ள வடக்குத்தி அம்மன் கோயிலுக்கு சிலர் வழிபட சென்ற போது கோயிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை நிழலில் குட்டி சிறுத்தை ஒன்று ஆசுவாசமாகப் படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்துள்ளது.
இதைப் பார்த்த பக்தர்கள் பதுங்கியிருந்து சிறுத்தை படுத்திருந்ததை செல்பேசியில் படம் பிடித்துள்ளனர். அந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கோயில் முகப்பில் படுத்து இளைப்பாறும் குட்டி சிறுத்தையின் படத்தை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிர்ந்து வருகின்றனர்.