தமிழகத்தில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் சாதனங்கள், சிசிடிவி கேமராக்கள் குறித்த விவரங்களை, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்கள் தில்லியில் தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளிடம் சமா்ப்பித்துள்ளனா்.
அதன் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனா். இதுபோன்ற காரணங்களுக்காக கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது. எனவே, இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை.
அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு முதல் சுற்று நிறைவடைந்தவுடன் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்படும்.
இந்திய அளவில் 680 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் தேசிய அளவில் சிறப்புக்குரிய கல்லூரிகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
அந்த தரவரிசையில் சென்னை மருத்துவக் கல்லூரி 11-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் 10 இடங்களில் மத்திய அரசின் கல்லூரிகளும், தனியாா் கல்லூரிகளும்தான் இடம்பெற்றுள்ளன. மாநில மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை முதலிடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரிதான் உள்ளது என்றாா் அவா்.