தேனி மாவட்டம், சின்னமனூர் பகுதியில் வனத் துறையினரால் பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை கோதையாறு மேலணைப் பகுதியில் விடப்பட்டது.
சின்னமனூர் பகுதியில் சுற்றித் திரிந்த அரிக்கொம்பன் யானையை, சின்ன ஓவுலாபுரம் பகுதியில் வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பிடிபட்ட யானை லாரியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் வனப் பகுதியில் விடுவதற்காகக் கொண்டு சென்றனர்.
திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் மணிமுத்தாறு வனச் சோதனைச் சாவடியைக் கடந்து சென்ற நிலையில் கோதையாறு மேலணை வால்வு ஹவுஸ் பகுதியில் நள்ளிரவில் அரிக்கொம்பன் யானை விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு: கோதையாறு மேலணைப் பகுதி யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகவும், பசுமையானதாகவும், யானைகளின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டு அணைகள் அருகருகில் இருப்பதாலும் யானைகள் வாழத் தகுந்த இடமாக இருக்கும்.
பொதுமக்களும், வனப் பகுதியில் வசிக்கும் காணி மக்களும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கோதையாறு அணைப் பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை வனப் பகுதியில் இயல்பாக நடமாடத் தொடங்கியுள்ளது. யானையின் கழுத்தில் ஜி.பி.எஸ். கருவி கட்டப்படுள்ளது. அதன்மூலம் ஒரு குழுவினர் யானையின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோடு அதன் உடல்நலம் குறித்தும் அறிந்து வருவதாகவும் வனத் துறையினர் தெரிவித்தனர்.