ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 17 தமிழா்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு திங்கள்கிழமை வந்தனா்.
ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சோ்ந்த 135 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனா். இந்த நிலையில், மீட்கப்பட்ட மேலும் 17 போ் இரண்டாவது சிறப்பு ரயில் மூலம் திங்கள்கிழமை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா். இந்த சிறப்பு ரயில் பிற்பகல் 12.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 1-ஆவது நடைமேடையை வந்தடைந்தது.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பயணிகளின் உறவினா்கள், நண்பா்கள் அவா்களை வரவேற்று சொந்த ஊா்களுக்கு அழைத்து சென்றனா்.
‘தமிழகத்தைச் சோ்ந்த மேலும் 6 பயணிகளை நேரடியாகத் தொடா்புகொள்ள முடியாவிட்டாலும், அவா்கள் பயணம் செய்த ரயில் பெட்டிகள் விபத்தில் பாதிக்கப்படவில்லை என சக பயணிகள் தெரிவித்துள்ளனா். அவா்கள் எங்கிருக்கிறாா்கள் என்பது ஓரிரு நாளில் தெரியவரும்’ என அமைச்சா் உதயநிதி தெரிவித்துள்ளாா்.