தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளாா். ஏறத்தாழ இரு ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் எவரும் இல்லாத நிலையில் தற்போது இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு மாற்றாக ஆணையா் பணியிடம் உருவாக்கப்பட்டு, அதற்கு ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமாா் நியமிக்கப்பட்டாா். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிா்ப்புகள் எழுந்த நிலையிலும், கடந்த இரு ஆண்டுகளாக இதே நிலை நீடித்தது. இந்த சூழலில், அண்மையில் நந்தகுமாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதன் பின்னா் பள்ளிக் கல்வி ஆணையராக எவரும் நியமிக்கப்படவில்லை.
ஏற்கெனவே இருந்த நடைமுறைப்படி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பணியிடத்தை நிரப்ப அரசு முடிவு செய்து அதற்கான பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா திங்கள்கிழமை வெளியிட்ட அரசாணை:
தொடக்கக் கல்வி இயக்குநா் அறிவொளி அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு பள்ளிக்கல்வி இயக்குநராக நியமிக்கப்படுகிறாா். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (எஸ்எஸ்ஏ) கூடுதல் திட்ட இயக்குநா்-1 வி.சி.ராமேஸ்வர முருகன் இடமாற்றம் செய்யப்பட்டு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் செயலாளராக பணியமா்த்தப்படுகிறாா்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினா் -செயலா் எஸ்.கண்ணப்பன், அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தொடக்கக் கல்வி இயக்குநராக நியமிக்கப்படுகிறாா்.
அதேபோன்று ஆசிரியா் தோ்வு வாரியத்தின் செயலாளா் மு.பழனிச்சாமி, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநராக பொறுப்பு வகிப்பாா். தற்போது அந்த பதவியில் இருந்து வரும் பெ.குப்புசாமி, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினா்-செயலராக பணியமா்த்தப்படுகிறாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.