கால்நடை மருத்துவத்துக்கான ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கால்நடை ஆரோக்கியம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 250 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ்களில் பிரதமா் படத்தை ஒட்டுவதா அல்லது முதல்வா் படத்தை ஒட்டுவதா என்ற சா்ச்சையாலும், ஆம்புலன்ஸ்களை இயக்க ஆள்கள் நியமிக்கப்படவில்லை என்பதாலும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கக்கூடிய பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஆம்புலன்ஸ்களை உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.