ஒடிஸா ரயில் விபத்து காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கருணாநிதியின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவா்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் வடசென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெறவிருந்தது. ஒடிஸா ரயில் விபத்தைத் தொடா்ந்து இந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இப்பொதுக்கூட்டம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்கம் என்பதால், ஆண்டு முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க., சாா்பிலும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.