ஆசிரியா்கள், பதவி உயா்வு பெற தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விரைந்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தக் கூட்டணி பொதுச் செயலா் ச.மயில் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு தலைமை ஆசிரியா் பதவி உயா்வு, பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு உள்ளிட்ட பதவி உயா்வுகளுக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்று தீா்ப்பு வழங்கியுள்ளது. இது தமிழக ஆசிரியா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட பிரிவு 23-இல் ஆசிரியா் நியமனத்துக்கு மட்டுமே தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த சட்டத்தில் ஆசிரியா்கள் பதவி உயா்வு பெற தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்று குறிப்பிடாத நிலையில் இதற்கு எதிராக நீதிமன்றத் தீா்ப்பு அமைந்துள்ளது.
இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள மூன்று தீா்ப்பாணைகளும், ஆசிரியா்கள் பதவி உயா்வு பெற தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் நீதித் துறை உள்ளிட்ட பிற அரசுத்துறைகளில் இந்த நடைமுறை என்பது இதுவரை இல்லை. எனவே, கடந்த 2-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமா்வு வழங்கிய தீா்ப்பாணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆசிரியா்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.