கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியது.
கிருஷ்ணகிரி அருகே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான ஓசூர், சூளகிரி மற்றும் கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து மெல்ல அதிகரித்தது.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும். கிருஷ்ணகிரி அணை 50 அடியை எட்டும் பொழுது அணையின் பாதுகாப்புக் கருதி, அணையிலிருந்து, தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படும் எனவும், இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, வெள்ளை அபாய எச்சரிக்கை விடுத்தார்.
இந்த சூழ்நிலையில், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம், இன்று (ஜூன் 5), 50 அடியை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து, தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை, 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்வரத்து வினாடிக்கு 404 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதையும் படிக்க: டபிள்யுடிசி: இறுதிப் போட்டியிலிருந்து ஹேஸில்வுட் விலகல்!
தற்போது, அணையின் நீர்மட்டம், 50.50 அடியாக உயர்ந்ததை அடுத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.