தமிழ்நாடு

ஒடிசா ரயில் விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை- தமிழ்நாடு அரசு

DIN

சென்னை: ஒடிசா கோர ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் தேடப்பட்டு வந்த நிலையில், 5 பேர் நலமுடன் பத்திரமாக உள்ளது தெரியவந்துள்ளது. எஞ்சிய 3 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்துக்குள்ளானது. 

இதில், இதுவரை 275 பேர் பலியாகியாகி உள்ளதாகவும், 88 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 187 உடல்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளது. உடல்களை அடையாளம் காணப்படுவது சவாலாக உள்ளது. 1,175 பேர் காயமடைந்துள்ளனர். 

பாலசோர் கோர ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் நிவாரண உதவிகளை செய்திடவும், பலியானவர்களை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. மேலும், மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை பெறுவதற்காகவும், பயணிகளின் உறவினர்கள் பயணிகளைப் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வரின் உத்தரவின் பேரில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளின் பட்டியல் தென்னக ரயில்வேயிலிருந்து பெறப்பட்டு அதில் தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டது.

இதையடுத்து மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து அவர்களை தொடர்பு கொண்டதில் 119 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும், எஞ்சிய 8 பேர்களது செல்பேன் மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலவில்லை என தெரிவித்ததுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 1. நாரகணிகோபி(34), 2. கார்த்திக்(19), 3. ரகுநாத்(21), 4. மீனா(66), 5. எ. ஜெகதீசன்(47), 6. கமல்(26), 7 கல்பனா(19), 8. அருண்(21) ஆகிய 8 பேர்களின் பெயர் மற்றும் வயது விவரங்களை வெளியிட்டு அவர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், அவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின், மாநில அவசரகால செயல்பாட்டு மைய உதவி எண்களான, கட்டணமில்லா தொலைபேசி – 1070 மற்றும் செல்பேசி - 9445869843 என்ற எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்நிலையில், ஒடிசா கோர ரயில் விபத்தில் தேடப்பட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர்களில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களில், கோவையைச் சேர்ந்த கோபி, சென்னையைச் சேர்ந்த ஜெகதீசன் ஆகிய 2 பேரும் பாதுகாப்பாக ஊர் திரும்பியுள்ளனர். மேலும், கமல் என்பவர் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள கார்த்திக், ரகுநாத், மீனா, கல்பனா மற்றும் அருண் ஆகிய 5 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை என்று எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT