புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 7 ஆம் தேதியாக இருந்த பள்ளிகள் திறப்பு தேதியை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக மாநிலச்செயலாளர் அன்பழகன் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார்.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கடந்த ஆண்டை விட அதிகரித்து வருவதாகவும், கடந்த 2 நாள்களாகவே 105.8 டிகிரி இருக்கிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் வெளியே போக முடியவில்லை.
இந்நிலையில், வரும் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், அதனை 15 ஆம் தேதி திறக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை மனு அளித்ததாகவும், மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார் என தெரிவித்தார்.
மேலும், சென்டாக் கவுன்சிலிங்குற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாலுக்கா அலுவலகங்களில் சான்றிதழ்களை பெறமுடியாத சூழல் உள்ளதால், விண்ணப்பிப்பதற்கான தேதியை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த அன்பழகன், மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே அனுமதி கிடைத்த பிறகே சென்டாக் மாணவர் சேர்க்கையை நடத்தலாம். அதுவரை உயர்கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க அரசு முன்வர வேண்டும். இதுகுறித்து ஒரு சரியான அறிக்கையை சுகாதாரத்துறையும், சென்டாக் நிர்வாகம் இணைந்து அறிவிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சிபிஎஸ்சி பாடத்தில் தமிழை கட்டாய பாடமாக இருக்குமா என்பதை தெளிவாக கூற வேண்டும். எங்களை பொறுத்தவரை சிபிஎஸ்சி பாடத்திட்டமே தவறு. மத்திய அரசின் மாணவர் விரோத செயலை மாணவர்கள் மத்தியில் புதுச்சேரி அரசு திணிக்க கூடாது. கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாத ஒரே மாநிலமாக பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் இந்த புதுச்சேரி மாநிலம் உள்ளது. பாஜகவின் கல்வி அமைச்சராக உள்ள நமச்சிவாயம் பாஜக அரசின் உத்தரவான கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தாமல் உள்ளது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும் தனியார் பள்ளிகூடங்களுக்கு சாதகமான நிலைபாட்டை இந்த அரசு எடுத்து வருவதாகவும், புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் எந்த தனியார் பள்ளிகளும் இல்லை எனவும் அன்பழகன் கூறினார்.