தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 7-ஆம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு, 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் இளங்கோவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனால், வார இறுதி நாள்களான ஜூன் 2 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரையிலான (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) மூன்று தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து சென்னைக்கு 900 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளிலிருந்து முக்கிய இடங்கள் மற்றும் பெங்களூருக்கு 1,300 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 2,200 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு பயணிகள் முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், மதுரை மற்றும் திருச்சியிலிருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளாா் இளங்கோவன்.