சென்னை: ஒடிசா கோர ரயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்று கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஜூன் 2 ஆம் தேதி இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்டரல் கோரமண்டல் விரைவு ரயில், மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்டல் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்டல் ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே கோட்ட மேலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
சிறப்பு உதவி மையத்தையும் ஆய்வு செய்த முதல்வர், ரயில்வே அதிகாரிகளிடம் ரயில் விபத்து மீட்புப் பணிகள் தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, ஒடிசா கோர ரயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது
கோர விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனாவிடம் காணொலி காட்சி மூலம் கேட்டறிந்தேன்.
விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்பு கொள்ளுவதற்கும், மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன்.
மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்துள்ளோம்.
ஒடிசா முதல்வரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளேன்.
அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் ஒடிசாவுக்கு விரைந்துள்ளனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க்கப்படும்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பயணிகளுக்கு அனைத்து உதவிகளையும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து பயணிகளை தமிழ்நாடு கொண்டு வர சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 50 பேர் விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்படுகின்றனர் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.