அடையாளம் காணப்பட்ட 80 பேரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினருமான அ.செல்லகுமார் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில், நேற்று இரவு மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 288-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பலத்த காயங்களுடன் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒடிசா ரயில் விபத்து மீட்பு பணியில் தேசிய மீட்பு குழு படையினர், ஒடிசா மாநில மீட்பு குழு, தீயணைப்பு படை வீரர்கள், உள்ளூர் காவல் துறையினர், தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், மேலும் அதுல்யா மிஸ்ரா, அர்ச்சனா பட்நாயக், பணீந்திர ரெட்டி ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ஒடிசா மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினருமான அ.செல்லகுமார், விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்.
மேலும், காங்கிரஸ் கட்சியினர் அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவிகளை அந்த மாநில அரசுடன் இணைந்து சேவையாற்றி வருகின்றனர்.
இதையும் படிக்க: போர்க்களம்போல் பாலாசோர் மாவட்ட மருத்துவமனைகள்
இந்த விபத்தில் பலியானவர்களில் 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனவும் விபத்தில் பலியானர்கள் பெரும்பாலனோர் மேற்கு வங்கத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் என அவர் தெரிவித்தார்.