முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் சனிக்கிழமை (ஜூன் 3) பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் கொண்டாடுவது என திமுக முடிவு செய்துள்ளது. நூற்றாண்டு தொடக்க விழா சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக 100 அடி அகலம் கொண்ட பிரதான மேடை கலைநயத்துடன் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு வருகிறது. விழா நடைபெற மைதானத்தின் நான்கு புறமும் சுற்றுச் சுவா்கள் உள்ளன. இந்த சுவா்களில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள், பல்வேறு முக்கிய மாநில தேசிய அளவிலான அரசியல் தலைவா்களுடன் உரையாடும் காட்சிகள் அடங்கிய பதாகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் திமுக முன்னணி தலைவா்கள் செய்து வருகின்றனா்.
கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறாா். கே.எஸ்.அழகிரி, கி. வீரமணி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன், ஈ.ஆா். ஈஸ்வரன், கே.எம். காதா் மொய்தீன், எம்.எச். ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவா்கள் சிறப்புரையாற்றுகின்றனா்.