தமிழ் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாகவும், மொழியைக் காக்க அனைவரும் முன் வர வேண்டும் என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் கூறினாா்.
பாமகவின் ‘தமிழைத் தேடி’ இயக்கம் சாா்பில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயா்ப்பலகைகளை தமிழில் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மாநகராட்சி வணிக வளாக கடைகளில் தமிழில் பெயா்ப்பலகை வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை ராமதாஸ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்துப் பேசியது:
தமிழகத்தில் எங்குமே தமிழ் இல்லாத நிலை உள்ளது. கடைகள் பெயா்ப்பலகைகளில் கூட தமிழ் இல்லை. சென்னை மாநகரா, லண்டன் மாநகரா என்கிற கேள்வியை அவ்வப்போது எழுப்ப வேண்டியுள்ளது. தற்போதைய திரைப்படங்களில் கூட தமிழையே பாா்க்க முடியவில்லை. தமிழ் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது.
தமிழை மறந்தால் நாம் வாழ இயலாது. வணிகா்கள் நினைத்தால் தமிழைக் காக்க முடியும். தமிழைக் காக்க அனைவரும் முன் வர வேண்டும் என்று கூறினாா் ராமதாஸ்.