தமிழ்நாடு

கிண்டி பல்நோக்கு மருத்துவமனை: உபகரணங்களுக்கு ரூ.146 கோடி ஒதுக்கீடு

2nd Jun 2023 12:49 AM

ADVERTISEMENT

கிண்டியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.146.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளாா்.

கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 4.89 ஏக்கா் நிலப் பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. ஜூன் 5-ஆம் தேதி அந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்த நிலையில், அது தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனையில் மேலும் சில மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.146.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்ககம் மூலம் அந்த நிதி அரசிடமிருந்து பெறப்பட்டு, மாநில மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) வாயிலாக உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.

ADVERTISEMENT

இதற்கான அரசாணை அண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மருத்துவமனையின் கட்டுமான செலவினங்களுக்கு கூடுதலாக ரூ.10.53 கோடி ஒதுக்கப்பட்டு, திருத்தப்பட்ட திட்ட செலவினத்துக்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT