கோவையில் விளம்பரப் பலகை விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே தனியார் நிறுவன விளம்பரப் பலகை அமைக்கும் பணியின்போது, அந்தப் பலகை திடீரென சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
சூலூரை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளின் உயரத்தை அதிகப்படுத்தும் பணியில் சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விளம்பரப் பலகை மற்றும் அதனை இணைக்கும் இரும்பு சட்டங்கள் சரிந்து விழுந்தன.
இதில், இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குணசேகரன் (52), குமார் (40), சேகர் (45), மற்றும் ஒரு தொழிலாளி ஆகிய நான்கு பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதில் குணசேகரன், குமார், சேகர் ஆகிய மூன்று பேரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர். மற்றொருவர் படுகாயத்துடன் நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற 3 தொழிலாளர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
கருமத்தம்பட்டி காவல் துறையினர், கருமத்தம்பட்டி டிஎஸ்பி தையல்நாயகி தலைமையில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சடலங்கள் உடல் கூறாய்வுக்காக சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இதையும் படிக்க: கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீடு!
இந்நிலையில், விளம்பரப் பலகை விழுந்து 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் 3 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்ததாரர் பாலாஜி, பழனிச்சாமி, நில உரிமையாளர் ராமசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.