தமிழ்நாடு

கொப்பரை தேங்காய் கொள்முதல்:  அரசாணை வெளியீடு!

DIN


சென்னை: மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில், ரூ.640 கோடி மதிப்பில் 56 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

கடந்த 21,032023 அன்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் பல்வேறு அறிவிப்புகளில், அறிவிப்பு எண். 53 கீழ்க்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளது:

"விளைபொருட்களின் அறுவடை காலத்தில், சந்தை வரத்து அதிகரிப்பதனால் ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டம்" தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இத்திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில், ரூ.420 கோடி மதிப்பிலான 40,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வரும் கொள்முதல் பருவத்தில், 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

2 பார்வை 3-ல் காணும் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநரின் கடிதத்தில், பார்வை (1).இல் காணும் அரசாணையின்படி கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கொள்முதல் வரத்தினைப் பொருத்து, கொள்முதல் நிலையங்களையும் கொள்முதல் இலக்கினையும் மாற்றம் செய்ய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதற்கிணங்க, திருப்பூர் விற்பனைக்குழுவின் முதன்மை கொள்முதல் நிலையமாக உள்ள காங்கேயம், பொங்கலூர், பெதப்பம்பட்டி, ஆலங்காயம், மூலனூர் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுடன், சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தையும் சேர்த்து, உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் 4000 மெட்ரிக் டன் இலக்கிலிருந்து 1000 மெட்ரிக் டன் இலக்கினை சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும், 71 முதன்மை கொள்முதல் நிலையங்களோடு சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தையும் சேர்த்து 72 முதன்மை கொள்முதல் நிலையங்களில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தால் கொப்பரை கொள்முதல் செய்ய நிர்வாக அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

3. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, 2023-2024-ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு எண்.53-இன்படி. 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயினை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய பார்வை (1)-இல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள 71 முதன்மை கொள்முதல் நிலையங்களோடு சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தையும் சேர்த்து 72 முதன்மை கொள்முதல் நிலையங்களில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தால் கொப்பரை கொள்முதல் செய்ய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

1. கொள்முதல் முடிந்தவுடன், விலை ஆதரவுத் திட்டத்திற்காக மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரிடம் உள்ள மூலதன நிதியிலிருந்து விவசாயிகளுக்கு மின்னணு பணப்பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும். 

2. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரையினை, மத்திய கிடங்கு நிறுவனம் அல்லது மாநில கிடங்கு நிறுவனத்திடம் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்க வேண்டும். 

3. கிடங்கு நிறுவனம் அல்லது மாநில கிடங்கு நிறுவனத்தால் கையாளப்பட்டால் கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான கிடங்கு வாடகையினை பெற்றுக்கொண்டு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். 

4. கிடங்கு ரசீது பெறப்பட்டவுடன், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்திடமிருந்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் மீள பெறவேண்டும். 

5. மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரால் இடைநிகழ்வு செலவினத்தை இறுதி செய்ய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துருவின் அடிப்படையில், கையாளப்படும் செலவுகளான, சாக்குப்பைகள் ஏற்றுதல், இறக்குதல், சுத்திகரிப்பு, தரம் பிரித்தல், போக்குவரத்து, இதர செலவுகள் மீள பெறவேண்டும். 

6. கொள்முதல் செய்வதற்கு, மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தோடு ஒப்பந்தம் செய்து இருக்க வேண்டும். 

மேலும், இந்நிர்வாக ஆணையினைத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்புமாறு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநர் அறிவுறுத்தப்படுகிறார் என கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT