சென்னையில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் மூன்றாவது நாளாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவின் நிறுவனம் சார்பில் கொழுப்பு சத்து அடிப்படையில் பச்சை, ஆரஞ்ச், சிவப்பு, நீல நிறப் பாக்கெட்டுகளில் சுமார் 14 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி, பசும் பால் விற்பனையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாதவரம் மத்திய பால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆவின் பண்ணைகளுக்கு வரவேண்டிய பால் தாமதமாக வருவதால் மூன்றாவது நாளாக பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் சரியான நேரத்தில் செல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.