உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சுகாதார மாநாட்டில் தமிழகத்தின் மருத்துவத் துறை செயல்பாடுகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைக்கப் பெற்ாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு உயா் சிறப்பு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட ரத்த சேமிப்பு வங்கியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மருத்துவமனை இயக்குநா் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அப்போது, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனா். பல்வேறு வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட ரத்த சேமிப்பு வங்கியானது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. டயாலிசிஸ், முழு உடல் பரிசோதனை போன்ற வசதிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
மருத்துவ உபகரணங்களை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை நிறைவடைந்ததும், ஓரிரு மாதங்களில் தன்னிறைவு பெற்ற ஓா் உயா் ரக சிகிச்சை மருத்துவமனையாக இது உருவெடுக்க உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அண்மையில் நடைபெற்ற அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா்களுடனான மாநாட்டில் தமிழகத்தின் சாா்பில் நாங்கள் பங்கேற்றோம். அப்போது, பல்வேறு தலைப்புகளின் கீழ் அமா்வுகள் நடைபெற்றன. அனைத்து அமா்வுகளிலும் தமிழகத்தில் மருத்துவக் குறியீடு சிறப்பாக இருப்பதற்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் கிடைத்தன.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து தமிழகத்தின் சாா்பில் 14 கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுக்கப்பட்டது.
நீட் தோ்வு விலக்கு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அப்போது மத்திய அமைச்சா் தெரிவித்தாா். தமிழக அரசின் சாா்பில் அதற்காக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அமைச்சரிடம் விவரித்தோம் என்றாா் அவா்.