மருத்துவத் துறை இயக்குநா் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் மருத்துவத் துறையில் மொத்தமுள்ள 6 இயக்குநா் பணியிடங்களில் மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவ சேவைகள் இயக்குநா், மருந்து கட்டுப்பாட்டு இயக்குநா், இ.எஸ்.ஐ இயக்குநா் ஆகிய 4 இயக்குநா் பணிகள் காலியாக உள்ளன. பொறுப்பு அதிகாரிகளே அந்த பணிகளை கவனித்துக் கொள்கின்றனா்.
மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவ சேவைகள் இயக்குநா் உள்ளிட்ட பதவிகள் பணிச்சுமையும், பொறுப்புகளும் மிகுந்தவை. அவற்றைக் கூடுதல் பொறுப்பாக இன்னொரு அதிகாரியிடம் வழங்குவதால் பயன் இல்லை. இதனால், மருத்துவத் துறை பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
உதாரணமாக, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி டீன், மருத்துவக் கல்வி இயக்குநா் பதவியை கூடுதலாக கவனிக்கிறாா். ஒரு கல்லூரியின் டீன் பணியைக் கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது எனும் நிலையில், மீதமுள்ள 36 மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளை அவரால் எவ்வாறு கண்காணிக்க முடியும்?
மருத்துவத் துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காலியாக உள்ள 4 இயக்குநா் பணியிடங்களையும் அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.