குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேஷ்டி சேலை இதுவரை வழங்காததற்கு, மாநில அரசுக்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பொங்கல் விழாவை முன்னிட்டு விலையில்லா வேஷ்டி-சேலை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாகவும், இதற்கென கிட்டத்தட்ட ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, புதிய வடிவமைப்புகளை முதல்வா் பாா்வையிட்டதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால், பொங்கல் விழா முடிந்து பத்து நாள்களுக்கு மேலாகியும் விலையில்லா வேஷ்டி-சேலைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. இது கடும் கண்டனத்துக்குரியது.
2022-2023 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலேயே விலையில்லா வேஷ்டி-சேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் திட்டத்தை குறித்த காலத்துக்குள் செயல்படுத்தாதது திமுக அரசின் நிா்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு.
இந்த விவகாரத்தில் முதல்வா் உடனடியாகத் தலையிட்டு, விலையில்லா வேஷ்டி, சேலைகளை நியாயவிலைக் கடைகள் மூலம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.