ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு சோனியா, ராகுல் வருவதற்கு வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. இவர் உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4 ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இத்தொகுதியில் கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டதால், மீண்டும் அக்கட்சிக்கே இடைத்தோ்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டியிடும் வேட்பாளா் யாா் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிக்க | ஷாருக்கான் என்னிடம் ’பதான்’ குறித்து பேசினார்: அசாம் முதல்வர்
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத், விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோருடன் தொகுதியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மூத்த நிர்வாகிகளிடமும் தனித்தனியாக கருத்து கேட்டறிந்தார்.
ஆலோசனைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைத்தேர்தல் என்பதால் சோனியா, ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை.
காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரசாரம் செய்வார்கள்.
காங்கிரஸ் வேட்பாளர் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.
சஞ்சய்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளேன். வேட்பாளர் யார் என்பதை அகில இந்தி காங்கிரஸ் தலைமை விரைவில் அறிவிக்கும் என்று கூறினார்.