நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக பிரதிநிதிகள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை இன்று நேரில் சந்தித்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை ஆளுநர் உரையின்போது நடந்த நிகழ்வு தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் திமுக பிரதிநிதிகள் குழு விளக்கம் அளித்துள்ளது.
திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் இடம்பெற்றிருந்தனர்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரையைத் தொடங்கியதும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடந்த காலங்களில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் அரசு உள்ளிட்ட கருத்துகளை வாசிக்காமல் தவிர்த்தார்.
இதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் உள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் வாசிக்கப்பட்ட தமிழ் உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
உடனே, கூட்டம் நிறைவடையும் முன்னரே அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார். முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தமிழக பேரவை வரலாற்றில் முதல்முறையாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.