சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் பொங்கல் திருவிழாவில் அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின்போது அரசு சார்பில் வழங்கப்பட்ட அறிக்கையில் தமிழ்நாடு, சமத்துவம், பெரியார் போன்ற வார்த்தைகளை விடுத்து ஆளுநர் உரையாற்றியது பேசுபொருளானது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் பல கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநா் மாளிகையில் நடைபெறும் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெறவில்லை. மாறாக மத்திய அரசின் இலச்சினை இருந்தது. இதற்கும் திமுக கூட்டணி கட்சி சார்பில் கண்டனம் எழுந்தது.
ஆனால், கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகை பொங்கல் திருவிழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெற்றிருந்தது.
இதனால், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முரணாக ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பொங்கல் விழா தொடங்கியது. இதில் தமிழக அரசு சார்பில் யாரும் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோன்று பாஜக சார்பில் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.