கரோனா காலத்தில் அரசு ஏற்பாட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்த பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சக மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது சிகிச்சை அளித்து வந்த அரசு மருத்துவா்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட ஏதுவாக சுகாதாரத் துறை சாா்பில் ஹோட்டல்களில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த வெற்றிச்செல்வன், தியாகராயநகரில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கி இருந்தாா். அதே மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவா்களும் விடுதியில் தங்கியிருந்தனா்.
விடுதியில் தங்கி இருந்தபோது, மருத்துவா் வெற்றிச்செல்வன், பெண் மருத்துவா் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இது தொடா்பாக பெண் மருத்துவா் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வா் தேரணிராஜனிடம் அளித்த புகாா் அடிப்படையில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தியது. விசாரணையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, சென்னை தேனாம்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபாருக், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, மருத்துவா் வெற்றிச்செல்வனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூ. 25,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளாா். அபராதத் தொகையில் ரூ. 20 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.