எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக்கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மற்றும் புதிய மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மேலும், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் சுகாதாரத் துறையில் புதிய நியமனங்களுக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணைகளையும் வழங்கினார்.
ரூ.1,136 கோடி மதிப்பில் 44 புதிய மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளுக்கும் முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்கள் அனைவருக்கும் போதிய தண்ணீர், உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு வெற்றிகரமாக பயணித்து வருகிறது.
இதையும் படிக்க..இபிஎஃப்ஓ திட்டத்தில் அதிக ஓய்வூதியம்: கேள்வி - பதில்கள்
நாளை மார்ச் 1 எனது 70வது பிறந்தநாள். சுமார் 52 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டுள்ளேன். அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்ட போது, அரசியலில்தான் நிச்சயம் இருந்திருப்பேன் என்று பதிலளித்தவன் நான்.
கிடைக்கின்ற பொறுப்புகளில், மக்களுக்கு சேவையாற்றும் இலக்குகளை எல்லா காலத்திலுமே எனக்கு நானே வைத்துக் கொள்கிறேன். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை. எனக்கு நானே இலக்கு வைத்துக் கொள்கிறேன். அந்த இலக்கை அடையவே எந்நாளும் உழைக்கிறேன் என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.