ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரவு 9 மணியைக் கடந்தும் ஒருசில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, ரஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் அதிக அளவிலான வாக்காளர்கள் இருந்ததால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வாக்குச்சாவடிகளில் மாலை 5.30 மணிக்கு மேல் வரிசையில் இருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு, வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
நீண்ட நேரமாக வரிசையில் நிற்பதால், ஆத்திரமடைந்த பெண்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளுவாக மாறியது.
இதனையொட்டி அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வாக்காளர்களிடம் பேசி சமாதானப்படுத்தினர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் வாக்களிக்க காத்திருப்பதால், இரவு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வாக்குப்பதிவு நேரம் முடிந்து, டோக்கன் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், மாலை 7 மணி நிலவரப்படி 74.69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.