விழுப்புரம் அன்புஜோதி காப்பகத்தில் மாயமான 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என்று சிபிசிஐடி காவல்துறை தெரிவித்துள்ளது.
திருப்பூரை சேர்ந்த சபீருல்லாவை மீட்டுத்தரக் கோரி அவரது உறவினர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தகவல் வெளியாகியுள்ளது.
காப்பகத்தில் இருந்து பெங்களூரு இல்லத்திற்கு சென்ற சபீருல்லா அங்கிருந்து தப்பியதாக சிபிசிஐடி காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் கண்டெடுக்கப்பட்ட முதியவரின் சடலம் சபீருல்லா அடையாளங்களுடன் ஒத்துப் போகிறது என்று சிபிசிஐடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபீருல்லா குறித்து அடையாளம் காட்ட அவரது உறவினருக்கு இரு வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் அன்பு ஜோதி ஆதரவற்றோர் காப்பகத்தில் மனிதஉரிமை மீறல்கள் நடைபெறுவதாகவும், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாகவும் எழுந்த புகாரின் பேரில், காப்பக உரிமையாளர் ஜிபீன் பேபி, அவரது மனைவி மரியாள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இவா்களில் தாஸ் (75) சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
இதையும் படிக்க: மார்ச் 20-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்!
இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.