பாஜக ஆளும் மாநிலங்களே கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டதாக சென்னையில் நடைபெற்ற கல்வி சிந்தனை அரங்கில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகிறது.
முதல் நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்நாடு மாடல் இந்தியாவிற்கான பாடம் என்ற தலைப்பில் பழனிவேல் தியாகராஜன் கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"இலவசங்களை நாங்கள் சமூகநீதியின் அடிப்படையில்தான் கொடுக்கிறோம். டிவி கொடுத்ததும் அந்த வகையில்தான். இலவசங்களைக் கொடுப்பதால் குடும்ப வன்முறைகள் குறைந்துள்ளன. தொழில் துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. மனிதவளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு, சமத்துவம் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்" என்றார்.
தொடர்ந்து, மத்திய அரசு இதுவரை செய்திராத ஒன்றை நீங்கள் செய்ய விரும்பினால் அது என்ன? என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், "வரி விதிப்பு முறையை நான் முற்போக்கான வகையில் செய்திருப்பேன். காரணம், அதிகப்படியான வரி ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்திடமிருந்து வருகிறது. பணக்காரர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த அளவே வரி செலுத்துகின்றனர். ஆனால், அரசியலமைப்பில் மாநில நிதியமைச்சராக எனக்கு அத்தகைய சாத்தியக்கூறுகள் இல்லை" என்றார்.
மேலும், "தற்போது மத்திய அரசுத் திட்டங்களில் பிரதமரின் பெயர் இடம்பெறுகிறது. ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீட்டில் 20 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு பகிர்ந்து கொள்கிறது. ஆனால் மாநில அரசுகள் எஞ்சிய 80 சதவிகித நிதியை வழங்குகின்றன. இப்படி இருக்கும்போது பிரதமரின் பெயர் எப்படி அந்தத் திட்டங்களில் இடம்பெறுகிறது?
இந்தக் கேள்விகளை முன்பு நாங்கள் எழுப்பிக் கொண்டிருந்தோம். தென் மாநிலங்கள் எழுப்பிக் கொண்டிருந்தன.
ஆனால், தற்போது வடமாநிலங்களிலுள்ள அரசுகளும், பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணிகளுமே இந்தக் கேள்விகளைக் கேட்கத் தொடங்கிவிட்டன.
ஜனநாயகத்தில் இதை நான் ஆரோக்கியமானதாகப் பார்க்கிறேன்” என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார்.