முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீா்செல்வமும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வாக்காளா்களுக்கு திமுக பணம் பட்டுவாடா செய்வதாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் செவ்வாய்க்கிழமை டி. ஜெயக்குமாா் புகாா் மனு அளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இடைத்தோ்தலில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி தனது கூட்டணி வெற்றிபெற, எல்லாவித முயற்சிகளையும் செய்து வருகிறது திமுக. பணத்தை வாரி இறைத்து வருகிறது. சுவா் விளம்பரங்களும் அத்துமீறி செய்யப்படுகின்றன. தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவித்தோம். நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.
அதிமுக வேட்பாளா் தென்னரசு பெயரையே சொல்ல சிரமப்படும் ஓபிஎஸ் தரப்பினா், இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என்பது முரண்பாடானது.
அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வத்தை இணைப்பது நடக்காது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் சந்திப்பும் சாத்தியமில்லாதது. திமுகவின் பிரிவாகவே ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறாா் என்றாா் அவா்.