நெய்வேலி: கடலூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி, மனைவியின் உறவினர்கள் மற்றும் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியதில் இரண்டு குழந்தைகள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர், பலத்த தீ காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதியழகன்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு தமிழரசி, தனலட்சுமி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
தமிழரசி திருமணம் ஆகி கணவர் பிரகாஷ் உடன் செல்லங்குப்பத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இரண்டாவது மகள் தனலட்சுமி அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த சிதம்பரத்தைச் சேர்ந்த சத்குரு என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், சத்குரு தனலட்சுமி தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | மாசி மாத பூஜை: சபரிமலை அய்யப்பன் கோயிலில் 12 ஆம் தேதி நடை திறப்பு!
இதன் காரணமாக தாய் செல்வி வீட்டில் தனலட்சுமி குழந்தையுடன் தங்கியிருந்தார். புதன்கிழமை காலை தாய் செல்வி, தனலட்சுமி அவரது கைக்குழந்தையுடன் மூவரும் சகோதரி தமிழரசி வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது அங்கு வந்த தனலட்சுமியின் கணவர் சத்குரு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அனைவரின் மீதும் ஊற்றி தீயிட்டு கொளுத்தினார்.
இந்த விபத்தில் தமிழரசி, தமிழரசியின் கை குழந்தை, தனலட்சுமி கைக்குழந்தை மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த தனலட்சுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தனலட்சுமி தாய் செல்வி, சத்குரு ஆகியோர் பலத்த தீ காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.