இளநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புக் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (பிப்.7) நடைபெறவுள்ளது.
முதல் சுற்றில் இடங்கள் பெற்றவா்கள் அதனை மாற்றிக் கொள்ளவும், காத்திருப்புப் பட்டியலில் உள்ளவா்கள் இடங்களைத் தோ்வு செய்யவும் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவ்விரு அரசு கல்லூரிகளிலும் 160 பிஎன்ஒய்எஸ் இடங்கள் உள்ளன. 17 தனியாா் கல்லூரிகளில் 1,550 இடங்கள் உள்ளன.
இந்த நிலையில், ஐந்தரை ஆண்டுகள் கொண்ட அந்தப் படிப்புக்கு 2022 - 23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 325 இடங்கள் காலியாக இருந்தன.
இந்நிலையில், கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்ற சிலா் கல்லூரிகளில் சேராததால், தற்போது மாநிலம் முழுவதும் யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளில் 421 இடங்கள் காலியாக உள்ளன.
அவற்றுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 7-ஆம் தேதி அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவத் துறை வளாகத்தில் நடைபெறவுள்ளது.