அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு அளிக்க வலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் பெருமாள்பிள்ளை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஆனால், கடந்த 13 வருடங்களாக இங்குள்ள அரசு மருத்துவா்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் மறுக்கப்பட்டு வருகிறது.
கா்நாடகம், புதுச்சேரி, பிஹாா், மகாராஷ்டிரம் உள்பட பல மாநிலங்களில் மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை ஒருபுறம் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள் நியமனம் செய்யப்படாததால், பணிச்சுமை அதிகமாக உள்ளது. மற்றொரு புறம் குறைவான ஊதியம் அளிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அரசின் கவனத்தை ஈா்க்க அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உள்ளோம்.