சேலம் மாநகரில் காவல் ஆணையாளர் நஜ்மல்ஹோதா வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்து அது குறித்த மனுக்களையும் பெற்று வருகிறார்.
சேலம் மாநகர காவல் ஆணையராக நஜ்மல் ஹோதா பொறுப்பேற்ற நாள் முதல் மாநகரில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
மாநகரில் அனைத்து பகுதிகளிலும் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொது இடங்களில் வைத்து குற்ற நடவடிக்கைகளை தடுத்து வருகிறார்.
மேலும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களை உடனடியாக கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநகர காவல் ஆணையாளர் அவ்வப்போது வீதிகளில் ரோந்து மேற்கொண்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.
சேலம் மாநகரில் காவலர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் காவல் ஆணையாளர் நஜ்மல்ஹோதா.
இதையும் படிக்க | விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு: அமைச்சர் செந்தில் பாலாஜி
சனிக்கிழமை மாலை சேலம் ஐந்து ரோட்டில் இருந்து பள்ளப்பட்டி வரை அதிகாரிகளுடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். நடைபயணமாக சென்று சாலை ஓரங்களில் உள்ள பொதுமக்கள், வணிக வளாகங்கள் மற்றும் காய்கறி வியாபாரிகள் ஆகியோரை நேரில் சந்தித்து காவல்துறையினரின் நடவடிக்கை எப்படி உள்ளது, ஏதாவது பிரச்னைகள் உள்ளதா? தங்களை யாராவது மிரட்டுகிறார்களா?, தங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பல்வேறு கேள்விகளையும் கேட்டு அதற்கான தீர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
இதன் அடிப்படையில் சனிக்கிழமை பள்ளப்பட்டி வரை சென்ற மாநகர காவல் ஆணையர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டதோடு அது குறித்து மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.
காவல் ஆணையாளரின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.