சென்னையில் காலமான புகழ்பெற்ற திரைப்பட பின்னணிப் பாடகி வாணிஜெயராம் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (பிப்.5) நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முடிசூடா இசை வாணியாக விளங்கிக் கொண்டிருக்கிற வாணிஜெயராம் அவர்கள் சனிக்கிழமை மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது.
இதையும் படிக்க | டி.பி. கஜேந்திரன் மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
வேலூர் மாவட்டத்திலே பிறந்து 19 மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி, புகழ் கொடி நாட்டியவர் வாணிஜெயராம். 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஒரு மிகப்பெரிய சரித்திர சாதனை படைத்திருக்கிறார்.
அண்மையில் தான் அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், பத்மபூஷன் விருதை பெறுவதற்கு முன்னரே எதிர்பாரத நிலையில் அவர் மறைந்திருக்கிறார். அவரது மறைவு செய்தி கேட்டு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை அவரது குடும்பத்தாருக்கு குறிப்பாக திரையுலகிற்கு நான் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.