நாமக்கல்: நாமக்கல் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பெருந்திட்ட வளாகத்தில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சனிக்கிழமை அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது.
தீ விபத்தை நேரில் பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்
இது பற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையும் படிக்க | ரயில்வே ஊழியர்களுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர்
தீ விபத்து குறித்து தோட்டக்கலை துறை அலுவலர்களிடம் விசாரிக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்
இந்த தீ விபத்து குறித்து தோட்டக்கலை துறை அலுவலர்கள் கூறியதாவது: நாமக்கல் நல்லிபாளையம் காவல் நிலையம் அருகில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கீழ் தளத்தில் கடந்த மூன்று மாதங்கள் தொடர்புடைய திட்ட ஆவணங்கள், அலுவலகம் சார்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்தன. அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த காவலாளி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். இந்த தீ விபத்தில் ஆவணங்கள் கணினிகள், அலுவலகப் பொருள்கள் அனைத்தும் கருகிவிட்டன. அண்மையில், எங்களுடைய துறை அலுவலகத்தில் மராமத்து பணிகள் நடைபெற்றன. இதனால் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள் என்றனர்.