சென்னை: திருக்குறளைச் சொல்வதுகூட தமிழ்நாட்டுக்கு அளிக்கும் சலுகை என அவர் நினைத்துவிட்டார் போலும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் பொது பட்ஜெட், சனாதன நோக்கம் கொண்ட மக்கள் விரோத அறிக்கை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொது பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றுகிற அறிக்கையாகும். நாட்டில் பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் உரையிலும், பொருளாதார ஆய்வு அறிக்கையிலும் இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கிய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அதே ஏமாற்று வேலையைத் தொடர்ந்துள்ளது.
வரிவிதிப்பில் மிகப்பெரிய சலுகை அளித்துவிட்டது போல நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பால் 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களே பயனடைவார்கள். மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கப் பிரிவினர் எவருக்கும் இந்த அறிவிப்பால் எந்தவொரு பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களைப் பற்றியோ, ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியோ ஒரு வார்த்தையும் சொல்லப்படவில்லைடி. பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நிதி அமைச்சர், இந்த பட்ஜெட்டில் அதையும் நிறுத்திவிட்டார். திருக்குறளைச் சொல்வதுகூட தமிழ்நாட்டுக்கு அளிக்கும் சலுகை என அவர் நினைத்துவிட்டார் போலும் என்றும் தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.