சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.43,800ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி பொருள்களுக்கான இறக்குமதியை அதிகரிப்பதாக அறிவித்தனர்.
இதன் விளைவாக, சென்னையில் இன்று காலை 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.480-ம், ஒரு கிராமுக்கு ரூ.60-ம் அதிரடியாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.43,320-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.43,800 விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ஒரு கிராம் 77.30-க்கு விற்பனையாகி வருகின்றது.
கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ரூ.1,096 அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2020 ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.43,360-க்கு விற்பனை செய்ததே உச்சமாக இருந்தது.
மேலும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.2,760 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.