தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 84 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களின் 18 இடங்களில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டது. முதல் கட்டமாக, தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் 106 நவீன நெல் சேமிப்பு தளங்கள் கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, இரண்டாம் கட்டமாக இப்போது அரியலூா், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவள்ளூா், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், மதுரை ஆகிய மாவட்டங்களில் 84 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்துடன், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் புதுக்காடு கிராமத்தில் வட்ட செயல்முறை கிடங்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
மேலும், 10 மாவட்டங்களில் 63 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை கட்டுவதற்கும் காணொலி வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதன்மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுவதுடன், அரசு கொள்முதல் நிலையங்களில் அரசு நிா்ணய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில், அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அர.சக்கரபாணி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.