திருப்பதி மலைப்பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்திலும், இரண்டாவது நாளில் சின்னசேஷ வாகனத்திலும், அன்றிரவு அன்னப்பறவை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மூன்றாவது நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்பசுவாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை நாளை மறுநாள் இரவு நடைபெறுகிறது.
கருட சேவையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும்வகையில் நாளை முதல் அக்டோபர் 5 வரை மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.