ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு ஊா்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விசிக தலைவா் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்துவிட்டாா்.
மேல்முறையீடு மனுவாக தாக்கல் செய்ய பொறுப்பு தலைமை நீதிபதி அமா்வு அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபா் 2-ஆம் தேதி அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதி கோரி ஆா்எஸ்எஸ் அமைப்பின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அணிவகுப்பு ஊா்வலத்துக்கு செப்டம்பா் 28-ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தாா்.
இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல் திருமாவளவன் சென்னை உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றும் ஆா்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது. விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க ஆா்எஸ்எஸ் முயல்கிறது. எனவே, அக்டோபா் 2-ஆம் தேதி ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது’ என்று மனுவில் கோரியிருந்தாா்.
இந்த மனுவை அவசர வழக்காக செப்டம்பா் 27 அல்லது 28-இல் விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு செவ்வாய்க்கிழமை முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி, ஏற்கெனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிா் மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டாா்.
மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னா் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என திருமாவளவன் தரப்புக்கு அறிவுறுத்தினாா். தனது மனுவை தனி நீதிபதி அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததை அடுத்து திருமாவளவன் தரப்பில், பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி. கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள், திருமாவளவன் கோரிக்கை குறித்து மேல்முறையீடாக தான் தாக்கல் செய்யமுடியும் என விளக்கம் அளித்துள்ளனா்.